ஆசிரியர் நியமன முறைகேடு விவகாரத்தில் மேற்கு வங்க மாநில தொழில்துறை அமைச்சரை அமலாக்கத்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில், கல்வியமைச்சராக இருந்தவர் பார்த்தா சாட்டர்ஜி. தற்போது தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சராக இருக்கிறார்.
அவர் கல்வித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்வதற்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இதில் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) அமைச்சரின் உதவியாளரான அர்பிதா முகர்ஜி வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.20 கோடி ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியை அமலாக்கத்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.